×

கூட்டாளியை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீச்சு பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை வல்லநாடு அழைத்து வந்து விசாரணை

*உடலை தாமிரபரணியில் வீசியது பற்றி நடித்து காட்டினார்

தூத்துக்குடி : கூட்டாளியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). இவர், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். அதன்பிறகு அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிரிந்த செந்தில்குமார், விருதுநகரில் குடியேறினார். மதுரை கருப்பாயூரணியில் நடந்த ஒரு கொலை வழக்கில் செந்தில்குமாரை போலீசார் தேடி வந்தனர். சிறிது காலத்திற்கு பிறகு வரிச்சியூர் செல்வத்தை சந்தித்த அவர், சமாதானம் பேசி மீண்டும் அவருடன் சேர்ந்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த 2021 ஜன.8ம் தேதி செந்தில்குமார் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி முருகலட்சுமி (35) விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்ததோடு நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து கோர்ட் உத்தரவின்பேரில் செந்தில்குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர், பயன்படுத்திய செல்போன் எண் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். அதில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் செந்தில்குமார் கடைசியாக தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் மதுரை சென்று வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ‘‘எனது தூண்டுதலின்பேரில் கூட்டாளிகள், செந்தில்குமாரை சென்னையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். அவரது உடலை 4 துண்டுகளாக வெட்டி காரில் வைத்து நெல்லைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் மதுரையில் நானும் அவர்களுடன் காரில் ஏறிக் கொண்டேன். அதன் பிறகு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் உடல் பாகங்களை வீசி விட்டோம். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் அவற்றை அடித்துச் சென்று விட்டது’’ என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் நேற்று மதியம் 3 மணியளவில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், அங்குள்ள பழைய பாலத்தில் இருந்து செந்தில்குமாரின் உடல் பாகங்களை வீசியதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரை பழைய பாலத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர், செந்தில்குமாரின் உடல் பாகங்களை தண்ணீரில் வீசியது எப்படி? என்பது குறித்து நடித்து காட்டினார்.

மேலும் வரிச்சியூர் செல்வம் தெரிவித்த தகவல்களை வைத்து ஒரு மேப் தயாரித்து கொண்டனர். ஆனால் இதுவரையில் செந்தில்குமாரின் உடல் பாகங்கள் எங்கும் கரை ஒதுங்கியதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவரை நெல்லை வழியாக சாத்தூர் கோர்ட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர்.

The post கூட்டாளியை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீச்சு பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை வல்லநாடு அழைத்து வந்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Roudi Varychur ,Thoothukudi ,Rawudi Varichuyur ,Roudi Varicheur ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது