×

சிறப்பு குழந்தை பள்ளியில் மாணவன் சித்ரவதை பாஜ பெண் மாவட்ட செயலாளர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சிறப்பு குழந்தைகளுக்கான தனியார் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவன் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அதை தட்டிக்கேட்ட குழந்தையின் அம்மாவை, பள்ளி உரிமையாளரும், பாஜ பெண் மாவட்ட செயலாளருமான மீனாட்சி ஆபாசமாக திட்டியும் மிரட்டினார். இது தொடர்பாக மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில் பாஜ ெபண் பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் சரண்யா(33). இவரது 7 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பால் பேச்சு குறைபாடு உள்ளது. இந்நிலையில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள ‘மை பாட்டி வீடு’ என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். கடந்த 7 மாதங்களாக சிறுவன் இங்கு படித்து வருகிறான். இந்நிலையில், அப்பள்ளியில் இன்டர்ன்ஷிப் மூலம் பணியாற்றி வரும் கல்லூரி மாணவர்கள், சிறுவன் அங்கு சித்ரவதை செய்யப்படுவதாகவும், கை, கால்கள் கட்டப்படுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் சரண்யா உடனே மழலையர் பள்ளி உரிமையாளரும், பாஜ மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சியிடம்(42) விசாரித்தார். மேலும், பள்ளிக்கு அனுப்பிய தனது மகனை துன்புறுத்தியது குறித்தும் கேட்டுள்ளார். அப்போது மீனாட்சி, அப்படி தான் செய்வோம் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். மேலும், சரண்யாவை ஆபாசமாக திட்டியும், மிரட்டியும் உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சரண்யா இது குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விசாரணையில் சிறுவனை துன்புறுத்தியதுடன், அதனை தட்டிக்கேட்க சென்ற தாய் சரண்யாவையும் பள்ளி உரிமையாளர் மீனாட்சி மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மீனாட்சியை கைது செய்தனர்.

The post சிறப்பு குழந்தை பள்ளியில் மாணவன் சித்ரவதை பாஜ பெண் மாவட்ட செயலாளர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Villivakkam CITCO Nagar ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் தடைமீறி...