×

மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா?: மலைக்கிராம மக்கள் கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் தாழையூத்து கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் கிராமத்தை இணைக்கும் மலைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து – மல்லபுரம் இடையே புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து விருதுநகர், பேரையூர், ஏழுமலை, இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலை வழியாக செல்லுவதை விட மலைச்சாலையை பயன்படுத்தினால் பயண தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மலைச்சாலையை பயன்படுத்த தொடங்கினர். மேலும் காலை, மாலை நேரங்களில் மலைச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை வழியாக போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த சாலையின் முக்கியத்துவம் கருதி 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து – மல்லப்புரம் இடையே அரசு மினி பஸ் சேவையும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மலைச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்காரணமாக செடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையின் அளவு குறுக தொடங்கியது. மேலும் மழையால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்களுக்கு மேல் பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறியது.

மேலும் சாலை குறுகியதால் ஒரே நேரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூட விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மலைச்சாலையின் ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் ஒன்றை ஒன்று விலகி செல்லும் போது சிறிது கவன குறைவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே விபத்து அச்சத்தால் பெரும்பாலன வாகன ஓட்டிகள் மலைச்சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது மலைச்சாலை வழியாக பைக்குகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. 8 கிமீ தொலைவுடைய மலைச்சாலையில், தேனி மாவட்ட எல்லை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட கட்டுபாட்டில் உள்ள மீதமுள்ள 7 கிமீ தொலைவு சாலை தொடர்ந்து சீரமைக்கப்படாமல் உள்ளது என மலைக்கிராம மக்கள் கூறுகின்றனர். முறுக்கோடை டிரைவர் ரவி கூறுகையில், கல்லுப்பட்டி. மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக அமைக்கப்பட்டுள்ள பிரதான சாலை வழியாக சென்றால் 70கிமீ தொலைவு செல்ல வேண்டும்.

ஆனால் மல்லப்புரம் மலைச்சாலையை பயன்படுத்தினால் 20 கிமீ தொலைவில் கிராமங்களுக்கு சென்று விடலாம். தற்போது சாலை அதிக சேதமடைந்து அபாயகரமான நிலையில் காணப்பட்டாலும் பயண நேரம் மற்றும் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு பெரும்பாலும் மலைச்சாலையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, இரு மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும், என்றார் முருகன், முத்தாலம்பாறை: வருசநாடு பகுதி மக்கள் வனத்துறை சார்பாக மலப்புரம் சாலையை சீரமைக்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதினால் விவசாய பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இது சம்பந்தமாக தேனி கலெக்டரும், மதுரை கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதுகுறித்து உப்புத்துறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா கூறுகையில், ‘‘வருசநாடு உப்புத்துறை பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. ஆங்காங்கே தடுப்புச்சுவரும் இல்லை. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா?: மலைக்கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mallappuram Hill Road ,Madurai-Theni ,Varusanadu ,Madurai district ,Mallapuram village ,Thalayuthu village ,Kadamalai-Mylai ,Theni district.… ,Mallapuram ,Madurai ,Theni ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்