×

அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு..!!

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தற்பொழுது பெய்த மழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். தற்பொழுது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடித்திட வேண்டும். மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்றிட வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முடித்திட வேண்டும்.

மழையினை எதிர்நோக்கி அனைத்து மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் தயார்நிலையில் இருந்திட வேண்டும். மழையின் காரணமாக எப்பகுதியிலும் தண்ணீர் தேங்காதவகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். இதுவரை 1154 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 800 கி.மீ, மழைநீர் வடிகால் பணிகள் ரூ.1,540 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 354 கி.மீ,. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் உடனடியாக முடித்திட வேண்டும்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 85.69 கி.மீ. நீளத்திலான ரூ.245.37 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாகவே முடித்திட வேண்டும்.பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மக்களுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வாரியப் பணிகள் போன்ற சாலை வெட்டுக்களை உடனுக்குடன் சீர்செய்ய வார்டு வாரியாகவும், மண்டல வாரியாகவும், தலைமையிடத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கூட்டத்தில் அறிவுறுத்தினார். முன்னதாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் 17 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்த காரணத்தினால், மெட்ரோ இரயில் பணிகள் காரணமாக கத்திபாரா சந்திப்பிலும், இரயில்வே மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் மழைநீர்த் தேக்கம் ஏற்பட்டது. இந்த நீர்த்தேக்கமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது. மற்ற அனைத்து இடங்களும் உடனடியாக இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் நிற்காமல் செல்வதற்கான வழிவகைகள், அங்கு மோட்டார் பம்புகள், வாகனங்கள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருத்தல், பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர்செய்தல், முடிக்கப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை உடனடியாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் போன்ற பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

கணேசபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணும் வகையில் இரயில்வே துறையிடம் அனுமதி பெறப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாகவே, மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் 2 மாதக் காலத்திற்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீரை வெளியேற்ற தேவையான அளவு மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆணையாளர் (பொ) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப, துணை ஆணையாளர்கள் .விஷு மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி) , ஷரண்யா அறி, இ.ஆ.ப., (கல்வி), .எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்) , எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Chennai ,Municipal Administration ,KN Nehru ,Chennai Corporation ,
× RELATED கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு...