×

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே நவீன வசதிகளுடன் புதிய சுரங்க நடைபாதை: விரைவில் திறக்க ஏற்பாடு

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே, நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே, நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்கும் வகையில், எஸ்கலேட்டர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை விரைவில் திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு, இதய அறுவை சிகிச்சை பிரிவு, உயர் ரத்த அழுத்த பிரவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், 24 மணி நேரமும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும். பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மற்றும் பேருந்து மூலம் இந்த மருத்துவமனைக்கு வருபவர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்துதான் மருத்துவமனைக்கு செல்ல முடியும். இதற்காக, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்கனவே சுரங்கப்பாதை வசதி உள்ளது.

ஆனால், இங்குள்ள முழு உடல் பரிசோதனை மையம் எதிரே உள்ள சாலையில் தான் ஓட்டல்கள், ஜூஸ் கடை பழக்கடை, செல்போன் ரீச்சார்ஜ் உள்ளிட்ட கடைகள் அமைந்துள்ளதால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் சாலையை கடந்துதான் மேற்கண்ட கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நோயாளிகளும் சாலையை கடக்க சிரமப்பட்டனர். எனவே, அந்த பகுதியில் மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்லும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் புதிதாக சுரங்க நடைபாதை கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இதில் மக்கள் சுலபமாக செல்ல நுழைவாயிலின் இருபுறமும் நகரும் படிக்கட்டு, கிரானைட் படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய சுரங்கப் பாதை வழியை பயன்படுத்தி, சாலையை கடக்காமல் எளிதாக, மறுபுறம் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. இயற்கை சார்ந்த ஓவியங்கள் சுரங்கப் பாதையில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டு உள்ளன. பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சுரங்க நடைபாதை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே நவீன வசதிகளுடன் புதிய சுரங்க நடைபாதை: விரைவில் திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Rajivkandi Government Hospital ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…