×

‘ஆதிபுருஷ்’ பாடலாசிரியருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்கியது போலீஸ்

மும்பை: ஆதி புருஷ் படத்தின் பாடலாசிரியர் மனோஜ் முன்டாஷிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவருக்கு மும்பை போலீசார் உரிய பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சி வெளியானதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வந்தவண்ணம் இருந்தன. திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மோசமாக இருப்பதாக கேலி செய்து சமூகவலைதளங்களில் அதிக கருத்துகள் பரவின. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள காட்சி அமைப்புகள், வசனங்கள், கதாபாத்திரங்களை உருவகப்படுத்தியுள்ள விதம் உள்ளிட்டவை ஒரு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்து அமைப்பினரின் ஒரு பிரிவினர் அத்திரைப்படத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரையரங்கு வாசல்களில் ஒட்டப்பட்டிருந்த ஆதிபுருஷ் போஸ்டர்களையும் கிழித்து வீசினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் பாடலாசிரியர் மனோஜ் முன்டாஷிர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மும்பை காவல்துறையிடம் முறையிட்டார். அதையடுத்து அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாடலாசிரியர் மனோஜ் முன்டாஷிரிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று கூறினர்.

The post ‘ஆதிபுருஷ்’ பாடலாசிரியருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்கியது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Aadipurush ,Mumbai ,Aadi Purush ,Manoj Mundashir ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்