×

கல்லூரி மாணவிக்கு காதல் டார்ச்சர் தடுத்த தம்பி உயிருடன் எரித்து கொலை: 3 கொடூரன்கள் கைது

திருமலை: அக்காவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்து கேலி, கிண்டல் செய்ததை தடுத்த தம்பி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் ராஜோலு கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சாரய்யா. இவரது மனைவி உப்பளமாதவி. மகன் அமர்நாத்(15), மகள் மாதவி(19). நஞ்சாரய்யா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், அமர்நாத்தின் அக்கா கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்லும்போது, அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர்(21) என்பவர் தன்னை காதலிக்கும்படி கூறி அடிக்கடி கேலி, கிண்டல் செய்து டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுவன் அமர்நாத், வெங்கடேஸ்வரிடம் தனது அக்காவை கிண்டல் செய்ய வேண்டாம் எனக்கூறி உள்ளார்.

ஆனால் கடந்த 14ம்தேதி கல்லூரிக்கு சென்ற மாதவியை வெங்கடேஸ்வர் வழக்கம்போல் கிண்டல் செய்துள்ளார். அப்போது அவருடன் சென்ற அமர்நாத், வெங்கடேஸ்வரை கண்டித்துள்ளார். இதுபோல் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வர் உட்பட 3 பேர் சேர்ந்து அமர்நாத்தை தாக்கி உள்ளனர்.

இதுபற்றி அமர்நாத் தனது உறவினர்களிடம் கூறி உள்ளார். பின்னர் உறவினர்களுடன் வெங்கடேஸ்வர் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தாராம். அப்போது வெங்கடேஸ்வரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வர், அமர்நாத்தை கொல்ல முடிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ம்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அதே பகுதியில் டியூஷன் சென்டருக்கு அமர்நாத் சைக்கிளில் சென்றார்.

அப்போது, வெங்கடேஸ்வர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து அமர்நாத்தை வழி மறித்து மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றனர். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அமர்நாத் இறந்தார்.

முன்னதாக போலீசாரிடம், தனது அக்காவை கிண்டல் செய்த வெங்கடேஸ்வர் உட்பட சிலர் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அமர்நாத் தெரிவித்துள்ளார். அதன்படி செருகுபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஸ்வர் உட்பட 3 பேரை நேற்று கைது செய்தனர். இந்நிலையில், அமர்நாத் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், ஒரு வீடு, மாதவி படிப்பு முடித்தவுடன் அரசு வேலை வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

The post கல்லூரி மாணவிக்கு காதல் டார்ச்சர் தடுத்த தம்பி உயிருடன் எரித்து கொலை: 3 கொடூரன்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Torcher ,Tirumalai ,Tampi ,Akka ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...