×

வாராஹி நவராத்திரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வாராஹி நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வ ரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் வாராஹி நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

இந்துமதத்தின் சக்தி தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். கால பருவங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

நான்கு வகையான நவராத்திரிகள்:

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனிமாதத்தில் கொண்டாடப்படுவது வாராஹி நவராத்திரி. (ஆனிமாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

வாராஹி நவராத்திரி என்பது ஆனி மாதத்தில், சந்திரமான காலக் கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி – ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமை, செழுமை, மகிழ்ச்சி என மூன்றையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பமும், நிறைவுக் காலமும்தான்.

விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும், விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி – ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிட்சமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே வாராஹி நவராத்திரி அமைந்திருக்கின்றது. வாராஹி நவராத்திரியில் அன்னையரை வணங்குவது சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்து விவசாயம் பெருகும் என்பதாகும்.

பொதுவாக வாராஹி நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் வாராஹி நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் வாராஹி நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க்கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்திகொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எதிரிகளை நீக்கி, தீயசக்தி அகல, வழக்குகளில் வெற்றிபெற, பித்ரு சாபம் விலக, வாழ்க்கையில் நிம்மதி பெற, விவசாயம் தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான அனைத்து விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள் இந்த வாராஹி.ஜூன் 19 முதல் ஜூன் 27 வரை நங்கநல்லூர் தில்லைகங்கா நகரில் உள்ள சர்வமங்களா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் வாராஹி நவராத்திரியில் பக்தர்கள் கலந்து கொண்டு அருளை பெற வேண்டுகிறோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

The post வாராஹி நவராத்திரி appeared first on Dinakaran.

Tags : Warahi Navratri ,Warahi Navaratri ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்