×

கீழ்வேளூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர ரூ.20 லட்சம் ஒதுக்க வேண்டும்

கீழ்வேளூர்: கீழ்வேளூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கீழ்வேளூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் (திமுக) தலைமை தாங்கினார். துணை தலைவர் புருஷோத்தமதாஸ், (திமுக) வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ராஜ்குமார் ஆகியோர். முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது: புருஷோத்தமதாஸ் (துணைத்தலைவர்) ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் குடிநீர் வசதி, குளங்களில் படித்துறை அமைத்தல், குடிநீர் பைப் லைன் அமைத்தல் போன்ற வசதிகளை உடனே சரி செய்து தர வேண்டும்.

கண்ணன் (திமுக): ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஊராட்சிகளில் குடிதண்ணீர், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு செய்து தர ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், நாகை மாவட்டத்தில் ஒரே வார சந்தையான தேவூர் வாரச்சந்தை அமைக்கும் பணியில் தரைத் தளம் பயன்படுத்துவதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேன்மொழி: வெற்றி வாய்க்கால் – முடிகொண்டான் இடையே இணைப்பு பால பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். திருக்கண்ணங்குடி திருவாசல் குளம், நாங்குடி சிவன் கோயில் குளம் ஆகிய இரண்டிற்கும் படித்துறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் (தி.மு.க): ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து திட்டங்களும் நிதிநிலையின் அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கருணாநிதி, ரெங்கா, பாலையா, பிரவினா, ரேவதி, இல்முன்னிசா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், முத்துக்குமரன், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கீழ்வேளூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர ரூ.20 லட்சம் ஒதுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kilvellur panchayat ,Kilivellur ,Kilivellur Panchayat ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் சாட்டியக்குடி பகுதியில்...