×

மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை எதிரொலி காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1100, சங்கரா ரூ.500, இறால் ரூ.600க்கு விற்பனை

சென்னை: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை எதிரொலியாக சென்னை காசிமேட்டில் மீன்வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர். வஞ்சிரம் ரூ.1100, சங்கரா ரூ.500, இறால் ரூ.600க்கு விற்பனையானது. அடுத்த வாரம் முதல் மீன் விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இக்காலத்தில் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழக கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் கடந்த 14ம் தேதி வரை இருந்தது.

இதனால், தமிழ்நாட்டின் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. குறிப்பாக சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தங்களது படகுகள், வலைகளை பழுது பார்த்தல், மீன்பிடி உபகரணத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இருந்ததால் பக்கத்து மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து மீன்கள் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

இதனால், தடைக்காலம் தொடங்கியதில் இருந்து வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 14ம் தேதியோடு மீன்பிடி தடைகாலம் முடிந்தது. இதையடுத்து, 15ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மட்டும் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்த அளவிலான விசைப்படகுகள் மட்டுமே கரை திரும்பின. அது மட்டுமல்லாமல் பெரும்பாலோனோரின் வீடுகளில் அசைவ உணவுகள் சமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் நேற்று காலை முதல் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் அசைவ பிரியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறியவகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களே அதிகமாக விற்பனைக்கு வந்தது. அதே நேரத்தில் மீன்கள் விலையும் அதிகமாகவே இருந்தது. அதாவது, வஞ்சிரம் கிலோ ரூ.950 முதல் ரூ.1100 வரையும், சங்கரா ரூ.300 முதல் ரூ.500, இறால் ரூ.300, இறால்(பெரிய வகை) 600, வவ்வால் ரூ.300 முதல் ரூ.600, கடமான் ரூ.600, பாறை ரூ.350, நெத்திலி ரூ.150 என்று விற்பனையானது.

விலை குறையாத போதிலும், கிடைத்த விலையில் மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றால், கரை திரும்ப குறைந்த பட்சம் 15 நாட்கள் ஆகும். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று விசைப்படகில் சென்றவர்கள் கரை திரும்ப வாய்ப்புள்ளது. அப்போது பெரிய வகை மீன்கள் அதிக அளவில் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும். அப்போது தான் மீன்விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதே போல நேற்று சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

The post மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை எதிரொலி காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1100, சங்கரா ரூ.500, இறால் ரூ.600க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Etreoli Kasimet ,Vanchiram ,Shankara ,CHENNAI ,Kasimet ,Vanjiram ,Dinakaran ,
× RELATED முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்;...