×

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை சுயநலத்துக்காக பயன்படுத்திய பாஜ : சாக்‌ஷி மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை பாஜவை சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார் என சாக்‌ஷி மாலிக் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. அவரை கைது செய்யவும், பதவி நீக்கவும் செய்ய வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜ தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தன் சுயநலத்துக்காக மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை பயன்படுத்தி கொள்வதாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சாக்‌ஷி மாலிக்கும், அவரது கணவரும், மல்யுத்த வீரருமான சத்யவர்த் கார்டியன் ஆகியோர் ட்விட்டரில் விடியோ வௌியிட்டுள்ளனர். அதில், “பாஜவை சேர்ந்த பபிதா போகத்தும், தீரத் ராணாவும் தான் பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கடிதம் வாங்கி தந்தனர். இப்போது பபிதாவும், தீரத்தும் எங்களுடன் இல்லை. இப்போது அரசுக்கு எதிராக போராட வேண்டாம் என்று கூறுகின்றனர். தங்களின் தேவைகளுக்காக அவர்கள் மல்யுத்த வீரர்களை பயன்படுத்தி கொண்டனர். எங்கள் போராட்டத்தை வலுவிழக்க செய்து விட்டனர்” இவ்வாறு பதிவிட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டை தீரத் ராணா மறுத்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள ட்விட்டரில், “நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் எங்கள் சகோதரிகள், மகள்களுடன் இருக்கிறோம். அவர்களை மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

The post மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை சுயநலத்துக்காக பயன்படுத்திய பாஜ : சாக்‌ஷி மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Baja ,Saakshi Malik ,New Delhi ,Sakshi ,Bhaja ,Bhabita Bogat ,
× RELATED ஒரு முறை பட்டனை அழுத்தினால் பாஜவுக்கு...