×

தமிழ்நாடு, உபி ஆலைகளில் பிரம்மோஸ் ஏவுகணைகள் டிரோன்கள் தயாரிக்கப்படும்: ராஜ்நாத்சிங் உறுதி

லக்னோ: நட்ஸ் மற்றும் போல்ட் மட்டுமல்ல, பிரம்மோஸ் ஏவுகணைகள், டிரோன்கள், மின்னணு போர் அமைப்புகளும் தமிழ்நாடு,உத்தரபிரதேச பாதுகாப்பு ஆலைகளில் தயாரிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். உத்தரப் பிரதேச பாதுகாப்பு தொழில்துறை சார்பில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கும் நோக்கம் கொண்ட ஒரு லட்சியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உ.பி.யின் பாதுகாப்பு வழித்தடத்தில், நட்ஸ் மற்றும் போல்ட் அல்லது உதிரி பாகங்கள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. டிரோன்கள், யுஏவிகள், எலக்ட்ரானிக் போர் அமைப்புகள், விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகளும் தயாரிக்கப்படும். உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழித்தடங்கள் மூலம் பாதுகாப்பு உற்பத்திக்கு தேவைப்படும் அத்தனையும் தயார் செய்யப்பட்டு வருகிறது. உபியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலைகளுக்காக 1,700 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறப்பட்டது.

இதில், 95 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 36 தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 600 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டது. இங்கு முதலீட்டு மதிப்பு ரூ.16,000 கோடிக்கு மேல் இருக்கும். இதுவரை சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உபியில் ஆக்ரா, அலிகார், சித்ரகுட், ஜான்சி, கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் பாதுகாப்பு வழித்தடத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

* சுயசார்பு ஒரு விருப்பம் அல்ல, அவசியம்
அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது.’ 1971 போரின் போது நமது நாட்டிற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டபோது கிடைக்கவில்லை. நாம் மாற்று வழிகளைத் தேட வேண்டியிருந்தது. 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரிலும் இதே நிலை தான். எனவே நம்மை வலுப்படுத்துவதை விட வேறு வழியில்லை. வேகமாக மாறிவரும் உலகில் சுயசார்பு என்பது எங்களுக்கு ஒரு விருப்பமல்ல, ஆனால் அது ஒரு தேவை. காலம் மாறும்போது, ​​​​ராணுவ உபகரணங்களின் பங்கு அதிகரிக்கிறது’ என்றார்.

The post தமிழ்நாடு, உபி ஆலைகளில் பிரம்மோஸ் ஏவுகணைகள் டிரோன்கள் தயாரிக்கப்படும்: ராஜ்நாத்சிங் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, UP ,Rajnathsingh ,Lucknow ,BrahMos ,Tamil Nadu, ,Uttar Pradesh ,
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...