கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒன்றிய அமைச்சர் நிசித் பிரமாணிக்கின் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக கூச் பெகர் மாவட்டத்தின் சாகிப்கஞ்ச் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஒன்றிய அமைச்சர் நிசித் பிரமாணிக் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் நிசித் பிரமாணிக் கூறுகையில், ‘‘எனது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. எங்களை நோக்கி நாட்டு குண்டுகள் வீசப்பட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கினர். எங்கள் வேட்பாளர்களின் ஆவணங்கள் கிழிக்கப்பட்டன. காவல்துறை வெறுமனே வேடிக்கை பார்த்தது’’ என குற்றம்சாட்டினார். இதனை திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க பாஜ முயற்சிப்பதாக கூறியது. வேட்பு மனு தாக்கல் தொடர்பான வன்முறையில் இதுவரை 5 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post மேற்கு வங்கத்தில் பதற்றம் ஒன்றிய அமைச்சரின் வாகனம் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.