பெங்களூரு: இலவச அரிசி திட்டத்தை முடக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வதால், கர்நாடக அமைச்சர்களுடன் ஜூன் 21ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறோம் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘கர்நாடக மாநிலத்துக்கு அரிசி வழங்காமல் ஒன்றிய அரசு இலவச திட்டத்தை முடக்க நினைக்கிறது. இதை கண்டித்து ஜூன் 20ம் தேதி கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடத்தப்படும். இதையடுத்து ஜூன் 21ம் தேதி அனைத்து அமைச்சர்களுடன் டெல்லி செல்கிறோம். அங்கு தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மேலும் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பல்வேறு மாநில திட்டங்கள் குறித்து விவாதிப்போம்.
பிரதமர் ேமாடியை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. நாம் கூட்டாட்சி முறையில் இருக்கிறோம். எனவே அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அனைவரையும் அழைத்துள்ளார். அமைச்சர்கள் சிலர் கார்கே மற்றும் ராகுல்காந்தியை இன்னும் சந்திக்கவில்ைல. கர்நாடக இலவச திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள். மேலும் அரசை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்குவார்கள். ஒன்றிய அமைச்சர்கள் சிலரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒருங்கிணைந்து கர்நாடக மாநில வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.
The post இலவச அரிசி திட்டத்தை முடக்க முயற்சி: அமைச்சர்களுடன் டெல்லி சென்று பிரதமருடன் சந்திப்பு.! துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல் appeared first on Dinakaran.