திருவாரூர், ஜூன் 16: சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறையினை தவறாக பயன்படுத்தி வரும் ஒன்றிய அரசுக்கு திமுக கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் கட்சி அலுவலகத்தில் நேற்று மாவட்ட அவை தலைவர் தன்ராஜ் தலைமையிலும், பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் விளக்கி பேசினார்.
இதில், வரும் 20ம் தேதி திருவாரூரில் நடைபெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்வது, திறப்பு விழாவிற்கு மறுநாள் முதல் மாவட்டம் முழுவதும் கட்சி வாரியாக இருந்து வரும் 18 ஒன்றியம், 4 நகரம் மற்றும் 7 பேரூர் வாரியாக கட்சியினர் மற்றும் பொது மக்களை அழைத்து வந்து ஒரு மாத காலத்திற்கு கலைஞர் கோட்டத்தினை பார்வையிட செய்வது, அதன் பின்னர் சார்பு அணிகள் மூலம் ஒரு மாத காலத்திற்கு பார்வையிட செய்வது, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையினை திறந்துவைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துகொள்வது, ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது மற்றும் மதவாதத்தால் நாட்டை பிளவுபடுத்தி கலவரத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி, சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் அமாலாக்க துறையினை தவறாக பயன்படுத்தி வரும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முத்துப்பேட்டை கார்த்திக், ராமகிருஷ்ணன், சாந்திபாஸ்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் நகர, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post சிபிஐ, இடியை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கு திமுக கடும் கண்டனம் appeared first on Dinakaran.