×

மயிலாடுதுறை அருகே 2 பேர் பலி; சொத்து பிரச்னையில் உறவினர்களே சயனைடு கலந்து கொன்றது தெரிந்தது: 2 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இரண்டு பேர் பலியான விவகாரத்தில் உறவினர்களே சயனைடு கலந்துகொடுத்து கொன்றது தெரியவந்துள்ளது.இதுசம்பந்தமாக மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி அறிக்கை; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தத்தங்குடி கிராமம் திருவாரூர் மெயின் ரோட்டில் வசித்த பழனி குருநாதன் (55), தத்தங்குடி கிராமம் மஞ்சு நகர் பகுதி பூராசாமி (63) ஆகிய இருவரும் குத்தாலம் வட்டம், மங்கநல்லூர் கிராமம், திருவாரூர் மெயின் ரோட்டில் உள்ள பழனி குருநாதனுக்கு சொந்தமான கொல்லன் பட்டறையில் கடந்த 12ம்தேதி மாலை மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் இருவரும் இறந்துவிட்டனர். பட்டறையில் 180 மி.லி அளவுள்ள மதுபாட்டில்கள் இரண்டு கிடந்தன. அதில் ஒன்று காலியாகவும் மற்றொன்று மது பாட்டிலாகவும் இருந்தது. பட்டறை இறந்த பழனி குருநாதனால் நடத்தப்பட்டது. அதில் இறந்த மற்றொரு நபரான பூராசாமி கடந்த மூன்று மாதங்களாக பழனி குருநாதனுடன் வேலை செய்து வந்துள்ளார்.

முதற்கட்ட பரிசோதனை அறிக்கையின்படி, இறந்த இருவரது ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகளில் சயனைடு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எத்தில்ஆல்கஹால் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பழனி குருநாதன் தந்தையின் முதல் மனைவி மகன்களான மனோகரன், பாஸ்கரன் சொத்து தகராறு காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொலை செய்தது கண்டறியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரால் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறை அருகே 2 பேர் பலி; சொத்து பிரச்னையில் உறவினர்களே சயனைடு கலந்து கொன்றது தெரிந்தது: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mahabharathi ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...