×

ஆவடி அருகே பரபரப்பு: மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்

ஆவடி: ஆவடி அருகே நேற்றிரவு தொடர் மின்தடையை கண்டித்து சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமரச பேச்சுவார்த்தையின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆவடி அருகே நெமிலிச்சேரி ஊராட்சி பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு 10.30 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நேற்று காலை 6 மணிக்குத்தான் வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் மின்தடை ஏற்பட்டது. அதன்பிறகு வெகுநேரமாகியும் மின்சாரம் வரவில்லை.

இதைத் தொடர்ந்து, நேற்றிரவு சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையில், அவ்வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, நெமிச்லிசேரி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பட்டாபிராம் போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி, சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, நெமிலிச்சேரி ஊராட்சியில் இரவு 10 மணியளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. அப்பகுதி மக்களும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஆவடி அருகே பரபரப்பு: மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Aavadi ,Chennai-Thritthani highway ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை...