சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கடந்த 2021 ஜூன் 14-ம் தேதி நியமிக்கப்பட்டார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக் காலம் ஓராண்டாக இருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் ஏ.கே.எஸ். விஜயன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஏ.கே.எஸ். விஜயனின் பதவிக்காலம் 15-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன் தற்போது திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பவர் ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாகச் செயல்படுபவர். முதலமைச்சரோ, அமைச்சர்களோ டெல்லிக்கு அரசு முறை பயணமாகச் செல்லும்போது அனைத்து ஏற்பாடுகளையும் அலுவல் ரீதியாக டெல்லி சிறப்பு பிரதிநிதியே மேற்கொள்வார். அந்த வகையில், இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போது 3-வது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
The post தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்..!! appeared first on Dinakaran.