×

போதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்; அண்ணனை கல்லால் அடித்து கொன்ற 2 தம்பிகள் கைது: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினர்

திருவொற்றியூர், ஜூன் 14: எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர், 3வது தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (52). மாற்றுத்திறனாளியான இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு மகனும், மகளும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான ஹரிஷ்குமார், அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி, தம்பிகளுடன் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பும், ஹரிஷ்குமார் மது போதையில் வந்து, தனது தம்பிகளான கிறிஸ்டோபர் (46) மற்றும் ஹென்றிஷ் குமார் (40) ஆகியோருடன் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவர்கள், ஹரிஷ்குமாரை கீழே தள்ளி விட்டுள்ளனர். பின்னர், அருகில் இருந்த செங்கல்லை எடுத்து இருவரும் சேர்ந்து ஹரிஷ் குமாரின் தலையில் அடித்துள்ளனர்.

இதில் ஹரிஷ் குமார் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து மருத்துவமனைக்கு அழைத்தபோது ஹரிஷ்குமார் செல்ல மறுத்துவிட்டார். இதனையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஹரிஷ்குமாருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகக் கூறினார். இதனையடுத்து எண்ணூர் போலீசார் ஹரிஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எண்ணூர் போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்தபோது, சரமாரியாக தாக்கப்பட்டதில் ஹரிஷ்குமார் இறந்தது தெரிந்தது. இதையடுத்து அவரது தம்பிகள் கிறிஸ்டோபர், ஹென்றிஷ்குமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

The post போதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்; அண்ணனை கல்லால் அடித்து கொன்ற 2 தம்பிகள் கைது: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Harish Kumar ,3rd Street, Ramakrishna Nagar, Ernavur ,Chennai ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...