உசிலம்பட்டி, ஜூன் 14: உசிலம்பட்டி நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நூற்றாண்டு பழமையான புளிய மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரம் இருந்த சுமார் 27 மரங்களை வெட்டும் பணி மதுரை கலெக்டர் அனுமதியுடன் துவங்கியுள்ளது.
இந்நிலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாய சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் 58 கால்வாய் இளைஞர் சங்க விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில், ஓரிரு நாட்களில் கோட்டாட்சியர் தலைமையில் நடக்க இருக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின்பு மரம் வெட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
The post உசிலம்பட்டி நகர் பகுதியில் நூற்றாண்டு பழமையான மரங்களை வெட்ட விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு appeared first on Dinakaran.