×

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

திருபுவனை, ஜூன் 14: கண்டமங்கலம் அருகே 2 வீடுகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்காப்பேர் ஈஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (50), விவசாயி. இவரது மனைவி வனஜா (40). நேற்று முன்தினம் இரவு இவர், சாப்பிட்டுவிட்டு குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக முன்பக்க கதவை திறந்து வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் வனஜாவின் கழுத்தில் யாரோ வருடுவது போல் இருந்ததால் அவர் திடீரென கண் விழித்துப் பார்த்தார். அப்போது ஒரு மர்ம நபர் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி ெசயினை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே வனஜா திருடன்.. திருடன்… என சத்தம் போட்டார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர், வயல்வெளி பகுதி வழியாக தப்பியோடி விட்டார்.

இதேபோல் அதே ஊரில் உள்ள ஈஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (62). இவர் புதுச்சேரியில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது அண்ணன் குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அண்ணன் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது பூட்டிக்கிடந்த ஜெயமூர்த்தி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு துணிமணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இரண்டு வீடுகளிலும் மொத்தம் 8 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெள்ளிப்பொருட்களும் கொள்ளை போயிருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Kandamangalam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...