×

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தில் விமானங்கள் பழுதுபார்த்தல், பராமரிப்பு மையம் விரைவில் தொடங்கப்படுகிறது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு வழங்கிய 32,300 சதுர அடி நிலத்தில், புதிதாக எம்ஆர்ஓ எனப்படும், விமானங்கள் பழுதுபார்த்தல் பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் விமான சேவைகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் விமான சேவைகள் அதிகளவில் இருந்தாலும், விமானங்களில் ஏற்படும் பழுதுகளை சீர் செய்வது, விமானங்களை பழுது பார்ப்பது போன்ற மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை உள்ளிட்ட 8 சர்வதேச விமான நிலையங்களை தேர்வு செய்தது. இந்த 8 சர்வதேச விமான நிலையங்களிலும், விமானங்களை பழுது பார்த்தல், பராமரித்தல், பழுதடைந்த உபகரணங்களை நீக்கிவிட்டு புதிய உபகரணங்கள் பொருத்துதல், விமானங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தல் போன்றவைகளுக்காக பராமரிப்பு பழுது நடவடிக்கைகள் மையங்கள் (எம்ஆர்ஓ) அமைக்கப்படுகின்றன.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் ஏப்ரான் எனப்படும் விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு பின் பகுதியில் இந்த எம்ஆர்ஓ மையத்தை அமைக்க முடிவு செய்தது. ஆனால் அதற்கான இடவசதி இல்லை. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலைய இயக்குனர் இணைந்து தமிழ்நாடு அரசிடம் அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர். அதன்படி விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு கிழக்கு பகுதியில், கவுல் பஜார் பகுதியை ஒட்டி 32,300 சதுர அடி நிலத்தை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை மூலமாக, கடந்த 2022, ஜூன் மாதம், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிக்காக ஒப்படைத்துள்ளது.

இந்த நிலத்தை தமிழ்நாடு அரசு நிலம் வழங்கி, ஓராண்டு ஆகியும் சென்னை ஒருங்கிணைந்த புதிய சர்வதேச முனையம் திறப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக இருந்ததால், இந்த பணியை தொடங்கவில்லை. தற்போது, இந்திய விமான நிலைய ஆணையம், டெல்லியில் தலைமை இடமாக இயங்கி கொண்டிருக்கும் சவுரியா ஏரோநாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் சென்னை விமான நிலையத்தில், எம்ஆர்ஓ மையத்தை விரைவில் அமைக்க இருக்கிறது.

அவர்கள், அடுத்த 15 ஆண்டுகள், சென்னை விமான நிலையத்தில் இந்த எம்ஆர்ஓ மையத்தை நிர்வகிப்பார்கள். அதன் மூலம் பழுதடைந்த விமானங்கள் உடனடியாக சீர் செய்யப்படும். அதேபோல், வெளிநாட்டு விமானங்கள் சென்னையில் பழுதடைந்தால் ஓடுபாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான நாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு ஒரு நாள் அல்லது 2 நாளில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் புறப்பட்டு செல்கிறது. சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி இந்த சம்பவங்கள் நடப்பதால், வெளிநாடு செல்ல வேண்டிய பயணிகள், சென்னை நகர ஓட்டல்களில் தங்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த எம்ஆர்ஓ மையம் சென்னையில் செயல்பட தொடங்கிய பின்பு, சில மணி நேரங்களில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சீர் செய்து, விமானத்தை அனுப்பி விடுவார்கள். இதனால் பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்கள், சென்னைக்கு புதிதாக விமான சேவைகளை தொடங்க வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த புதிய எம்ஆர்ஓ மையம் மூலம், சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் நல்ல முறையில் பழுதுபார்க்கப்பட்டு, புதிதாக வர்ணம் பூசப்பட்டு, இயக்கப்படும். அதுமட்டுமின்றி இனிமேல் பயன்படுத்த முடியாத விமானங்களில் உள்ள நல்ல உபகரணங்களை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் உட்பட்ட பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம் இணைந்து, டெல்லியில் உள்ள அந்த தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இந்த எம்ஆர்ஓ மையம் செயல்படும்போது, சென்னை விமான நிலையத்தில் மேலும் பலருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தில் விமானங்கள் பழுதுபார்த்தல், பராமரிப்பு மையம் விரைவில் தொடங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Tamil Nadu government ,Meenambakkam ,MRO ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்