×

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டிராக்டரும், பைக்கும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

கடலூர் : திட்டக்குடி அருகே டிராக்டரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (19), அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோர் திட்டக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

ஆவினங்குடி அருகே விருத்தாசலம் – திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, கல்லூரி பேருந்து முந்தி செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டரும் இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவினங்குடி காவல்துறையினர், படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பலியானார்.

உயிரிழந்த இளைஞர்கள் இருவர் உடல்களும் உடற்கூராய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவினங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டிராக்டரும், பைக்கும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tadakkudi, Cuddalore district ,Cuddalore ,Tadakkudi ,Cuddalore District ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்