பாப்பாரப்பட்டி, ஜூன் 13: பாலக்கோடு அருகே பூகானஹள்ளியில், பொன்னியம்மன் கோயில் விழாவையொட்டி எருதாட்ட விழா நடந்தது. பாலக்கோடு அருகே பூகானஹள்ளி பகுதியில், 13 கிராமங்களுக்கு சொந்தமான பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில், சித்திரை மாத திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பொன் ஏறு கட்டுதல், பூமி விளக்கு வைத்தல், கரகம் எடுத்தல், கங்கையம்மன், கௌரம்மாள் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து கட்டு சோறு உடைத்தல் மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் 13 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்து, ஊர்வலமாக கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று, எருதாட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் 13 கிராமங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட எருதுகள் அழைத்து வரப்பட்டு, தனித்தனியாக கோயிலின் முன்பு அணிவகுத்து நிறுத்தப்பட்டு, எருதாட்டம் நடந்தது. பின்னர், கிராம ஊர்க்கவுண்டர்கள் மற்றும் கோல்காரர்களுக்கு ஊர்மக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
The post பூகானஹள்ளியில் எருதாட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.