×

முறையான மின்சாரம் வழங்க கோரி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

வடலூர், ஜூன் 12: நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் என்எல்சி நிறுவனம் முறையான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பம் பகுதியில் திருவள்ளுவர் நகர், ஐடிஐ நகர், பெரியார் நகர், பட்டையார் காலனி உள்ளிட்ட பகுதி மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 4ம் தேதி அன்று எந்தவித முன்னறிவிப்பின்றி என்எல்சியால் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பலமுறை என்எல்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று இரவு 7.30 மணி அளவில் திடீரென கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பழைய பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றது. அப்போது விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனமும் அந்த சாலை மறியலில் தடுத்து நிறுத்தப்பட்டது. என்ன பிரச்னை என்று மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராம் அவரது காரிலிருந்து இறங்கி சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கேட்பதற்காக சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்கள் தாங்கள் இத்தனை ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம்.

எங்களுக்கு தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் உள்ளிட்டவைகள் எல்லாம் வீட்டிற்குள்ளே வருகிறது. சிறுவர்கள், மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமலும் இருக்கின்றனர் என்றனர். இதையடுத்து, உடனே பகுதி மக்களை அழைத்துக் கொண்டு அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அப்பகுதி மக்களை அழைத்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து என்எல்சி அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பொழுது நாளை மதியத்திற்குள் மின்சாரம் வழங்குவதாக என்எல்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உங்களுக்கு நிரந்தரமாக இப்பகுதியில் தீர்வு காண அனைவரும் நாளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு தாருங்கள் எனக் கூறி அங்கிருந்து சென்றார். இதனை ஏற்றுக் கொண்ட அப்பகுதி மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 20 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post முறையான மின்சாரம் வழங்க கோரி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : NLC ,Vadalur ,Neyveli Mandharakuppam ,
× RELATED வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான...