ஊட்டி, ஜூன் 12: நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. அதேநேரம் தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தமிழக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
குறிப்பாக ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். மிதி படகு மற்றும் 10 மற்றும் 15 பேர் பயணிக்க கூடிய மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர். கூட்டம் அலைமோதியதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நேற்று மாலை முதல் கூட்டம் குறைய துவங்கியது.
The post ஊட்டி படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.