அழகர்கோவில், ஜூன் 8: அழகர்கோவில் அருகே கல்லம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட வராஹி அம்மன் கோயிலில் நேற்று மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அழகர்கோவில் அருகே கல்லம்பட்டியில் வராஹி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோயிலின் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலையில் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது.
பின்னர் கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் கொண்ட குடம் புறப்பாடு நடைபெற்றது. இந்த புனித தீர்த்தக்குடங்கள் முதற்கட்டமாக கோயிலை வலம் வந்தன. பின்னர் காலை 11.59 மணிக்கு புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வராஹி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார். கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயிலின் ஸ்தாபகர் செந்தில்குமார் செய்திருந்தார். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
The post அழகர்கோவில் அருகே வராஹி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.