×

செம்பனார்கோயில் பகுதியில் காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராகும் பருத்தி-நல்ல விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் பகுதியில் காய்கள் காய்த்து அறுவடைக்கு பருத்தி தயாராகி வருகிறது. இதற்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், கீழ் மாத்தூர், கிள்ளியூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், வடகரை, திருக்கடையூர், சங்கரன்பந்தல், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், சம்பா அறுவடைக்கு பின்னர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் சாகுபடி செய்து இரண்டு மாதத்திற்கு மேலான பருத்திச் செடிகளில் தற்போது அதிக அளவில் காய்கள் காய்த்துள்ளன.

இன்னும் ஒரு சில வாரங்களில் காய்கள் வெடித்து பருத்தி அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறுகையில், கோடை காலத்திற்கு ஏற்ற பயிராக பருத்தி உள்ளது. இதனால் சம்பா அறுவடை பணியை முடித்த பின்னர் தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களில் பருத்தி சாகுபடியில் ஈடுபடுவோம். இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பருத்தி விதைப்பு செய்தோம்.

இதனை தொடர்ந்து சில வாரங்கள் கடந்த பின்னர் பருத்தி செடியின் அடிப்பகுதியில் பொட்டாஸ், அடிஉரம், யூரியா போன்றவை செலுத்தி, காய்ப்பு காய்க்கும்போது செடி தாங்கும் வகையில் மண்ணை சுற்றி தேக்கினோம் (பார் அணைக்கும் பணி). அதன் பின்னர் பூச்சி தாக்குதலில் இருந்து பருத்திச் செடியை பாதுகாக்க மேல் மருந்து தெளித்தோம். இதன் பயனாக பருத்திச் செடிகள் செழிப்பாக வளர்ந்து பூ பூத்தது. சில நாட்களுக்கு பின்னர் பூ உதிர்ந்து தற்போது பருத்தி செடியில் காய்கள் முளைத்துள்ளன. சில செடிகளில் பூ பூக்காமலேயே காய்களும் காய்க்கும்.

பருத்தி 3 மாதம் சாகுபடி காலமாகவும், 3 மாதம் மகசூல் தரும் காலமாகவும் உள்ளது. மற்ற பயிர்களை விட பருத்தியை குறித்த காலத்தில் சாகுபடி செய்து பராமரித்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திக்கு நல்ல விலை கிடைத்தால் தான் லாபம் பார்க்க முடியும். எனவே பருத்திக்கு நல்ல விலை கிடைக்குமா என எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post செம்பனார்கோயில் பகுதியில் காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராகும் பருத்தி-நல்ல விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sembanarcoil ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை