×

பாஜ கட்சி அலுவலகமாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்ற சுவர்களில் சனாதனம், சமஸ்கிருதம்: மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை: புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜ அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்க வேண்டிய ஓர் இடம். ஆனால், பாஜ கட்சி அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தாண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளதன் மூலம், இவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்க உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சாணக்கியனுக்கும், ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்?

கட்டிடம் எங்கும் சமஸ்கிருத எழுத்துக்களாலும் புராண காட்சிகளாலும் நிரம்பியுள்ளது. கட்டிடத்தின் நடுவில் 250 அடி நீளத்தில் மிகப்பிரமாண்ட விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வார்ப்புக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் ஒரு பேரவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? சகோதரத்துவமும், சமத்துவமும் பேணும் அரசியல் அமைப்பிற்கு எதிரான வர்ணங்களை மேற்கோளாகக் கட்டுவதும், தற்கால அரசமைப்பு என்பது அதன் நீட்சி என்று கூறுவதும் அரசமைப்பின் மாண்பையும் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் முயற்சி.

இந்தியாவின் வரலாறு, இந்தியாவின் ஆட்சி முறை என்பவை மவுரியர், குப்தர், முகலாயர், மராத்தியர், கலிங்கர், ஆங்கிலேயர், பல்வேறு பழங்குடிகள் உள்ளிட்ட எல்லோருடைய கூறுகளையும் உள்ளடக்கிய அதிலிருந்து பரிணமித்த ஓர் ஆட்சி முறையைக் கொண்டுள்ளது. அவை இங்குள்ள கலைவடிவங்களில் இல்லை. பன்மைத்துவம் கொண்ட நந்தலால் போஸின் படைப்பினை அழித்து, அதற்கு மாறாக பண்டைய வேத காலத்தில் ஜனநாயகம் நிலவியது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவதும், நேரடியாக இந்துத்துவா அரசியல் கோட்பாட்டை நிறுவும் அப்பட்டமான முயற்சியாகும். பாஜ கட்சி அலுவலகத்தில் நிறுவ வேண்டியதை, நாட்டின் பேரவையான நாடாளுமன்றத்தில் நிறுவியதென்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரான செயல். சாவர்க்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக் கொண்டு சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பாஜ கட்சி அலுவலகமாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்ற சுவர்களில் சனாதனம், சமஸ்கிருதம்: மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Sanatnam ,Sanskrit ,BJP ,Madurai ,S.Venkatesan ,Sanatana ,Parliament ,Sanathanam ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...