பெரம்பூர்: கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் குப்பையை பிரித்து, அதிலிருந்து இரும்பு, செம்பு உள்ளிட்ட பொருட்களை கடையில் போட்டு, அதில் வரும் பணத்தில் பிழைப்பு நடத்துவது வழக்கம். இதனால், அவர்கள் தினமும் காலை 6 மணி முதல் இப்பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில், கொருக்குப்பேட்டை ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமரனின் மனைவி பார்வதி (45) நேற்று காலை 7 மணியளவில் கொடுங்கையூர் குப்பைமேடு கதவு எண் எட்டின் உட்புறமாக குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத குப்பை லாரி ஒன்று பார்வதியில் கால் மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பார்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து, அவ்வழியாக குப்பை எடுத்துச் சென்றவர்கள் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பார்வதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், நேற்று காலை அவ்வழியாக சென்ற குப்பை லாரிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொடுங்கையூர் குப்பைமேட்டில் குப்பை லாரி மோதி பெண் பரிதாப பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.