×

மதுரை அருகே ஒரே பகுதியில் 6 சதிக் கற்கள் கண்டுபிடிப்பு-16ம் நூற்றாண்டை சேர்ந்தது

மதுரை : மதுரை அருகே ஒரே பகுதியில் 6 சதிக்கற்கள் இருப்பது தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரையை சேர்ந்த தொல்தமிழ் மெய்யியல் ஆய்வாளர் ஹாருன் பாஷா, தொல்லியல் ஆய்வாளர் விவேக் ஆகியோர் மதுரை மாவட்டம் சோழவந்தான் – குருவித்துறை சாலையில், அயன் குருவித்துறை அருகில் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் 6 சதிக் கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். சதிக்கல் என்பது கணவர் உயிர்நீத்த பின் மனைவியர் அவர் எரியூட்டும் சிதையிலே விழுந்து இறக்கும் முறையாகும். 4 இரண்டடுக்கு, 2 ஓர் அடுக்கு என்று மொத்தம் 6 கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆய்வாளர் ஹாருன் பாஷா கூறும்போது, ‘‘முதல் கல் 3 அடி உயரம், 1 அடி அகலம் கொண்டது. அதில் கீழ் அடுக்கு கணவன் மனைவியும், மேல் அடுக்கு மேல்நோக்கிய கத்தி வடிவம் கொண்டதான 2 பெண்கள் உள்ள சதிக்கல்.இரண்டாவது, போரில் பரியேறி இறந்துபட்டான் என்னும் வகையில் இருக்கும் 2 அடுக்கு சதிக்கல். இது 4 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்டது. கீழ் உள்ள குதிரை வீரன் சிற்பம் போரில் மாய்ந்ததையும், மேல் உள்ள மனைவியர் சிலை அவர்கள் தீ பாய்ந்ததையும் குறிப்பிடுகிறது. மூன்றாவது சதிக்கல் 3.5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டது.

இதிலும் கீழ் அடுக்கு போரில் இறந்து பட்டவனையும், மேல் அடுக்கில் உள்ள பெண்களில் ஒருவர் இடக்கையில் தீப்பந்தம் ஏந்தி இருப்பது அவர் உடன்கட்டை ஏறியதையும் குறிக்கிறது. நான்காவதாக, 2 மனைவியருடன் கூடிய 2 அடுக்கு சதிக்கல். கீழ் அடுக்கில் ஒரு ஆண், ஒரு மனைவி குழந்தையுடனும் மற்றொருவர் கையில் ஒரு கலனுடனும் இருக்கிறார். மேல் அடுக்கில் மூவரும் அமர்ந்த கோலமாய் இருப்பது அவர்கள் தீப்பாய்ந்து மேல் உலகம் சென்றதைக் குறிக்கிறது. இவரும் களத்தில் இறந்துள்ளார்.

அதைக் குறிக்க 3வது அடுக்காக குதிரை வீரன் சிலை உள்ளது. இது 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது. இதே போல இன்னும் 2 சதிக்கற்கள் முன் சொன்ன இடத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளன.இவை ஒரு அடுக்கு கல் ஆகும். உடன்கட்டை ஏறியதைக் குறிப்பதாக கையில் உள்ள கத்தி மேல் நோக்கி இருப்பது குறிப்பிடப்படுகிறது.
ஒரே பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இவை அனைத்துமே 16ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். எழுத்துகள் எதுவும் கற்களில் இல்லை’’ என்றார்.

The post மதுரை அருகே ஒரே பகுதியில் 6 சதிக் கற்கள் கண்டுபிடிப்பு-16ம் நூற்றாண்டை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை