சென்னை: டெல்லியில் நமது நாட்டு வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது, இதையடுத்து நடிகரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து, கடந்த ஜனவரி மாதத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில், அதன் இரண்டாவது கட்ட போராட்டம் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
பிரிஜ் பூஷண் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என வீரர், வீராங்கனைகளும் கூறியிருந்தனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது, இந்த நிலையில் கமல்ஹாசன் தனதுஆதரவை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், தேசத்தின் பெருமைக்காக போராட வேண்டிய நமது வீரர், வீராங்கனைகளை தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடும்படி நிர்ப்பந்தித்துள்ளோம். எனது இந்தியர்களே, நாம் கவனிக்க வேண்டியது நமது தேசிய விளையாட்டு வீராங்கனைகளையா அல்லது குற்ற வரலாற்றைக் கொண்ட அரசியல்வாதியா? என்று பதிவிட்டுள்ளார்.
The post தேசப் பெருமைக்காக விளையாடுவதற்கு பதிலாக, அவர்களை நாம் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராட வைத்துவிட்டோம்: கமல்ஹாசன் ட்வீட் appeared first on Dinakaran.
