×

ஓட்டலில் நடனமாடிய பெண்கள் மீது ரூபாய் நோட்டு வீச்சு: இருதரப்பு மோதலில் துப்பாக்கி சூடு

மொஹாலி: பஞ்சாபில் ஓட்டலில் ஒன்றில் நடனமாடிய பெண்கள் மீது ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரில் அமைந்துள்ள ஓட்டலில் நடந்த விருந்தில், பெண்கள் நடமாடிய போது குறிப்பிட்ட சிலர் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை வீசினர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். தகவலறிந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் எஸ்எஸ்பி சந்தீப் கர்க் கூறுகையில், ‘ஓட்டலில் நடந்த விருந்தில் பங்கேற்பதற்காக நள்ளிரவு 1 மணியளவில், பஞ்ச்குலாவை சேர்ந்த கரண் சப்ரா தனது பெண் நண்பர்களுடன் வந்தார். அவர்களில் சில பெண்கள் நடனமாடினர். பெண்களின் நடனத்தில் மயங்கிய மற்றொரு தரப்பினர், அந்தப் பெண்கள் மீது ரூபாய் நோட்டுகளை வீசினர். அவை அங்குள்ள நீச்சல் குளத்தில் பரவிக் கிடந்தன.

இதனால் கோபமடைந்த கரண் சப்ரா மற்றும் அவரது நண்பர்கள், ரூபாய் நோட்டுகளை வீசியவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் நடைபெறவில்லை. சம்பவ இடத்தில் இருந்து 4 தோட்டாக்களை மீட்டுள்ளோம். இருதரப்பிலும் துப்பாக்கி சூடு நடத்தியவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post ஓட்டலில் நடனமாடிய பெண்கள் மீது ரூபாய் நோட்டு வீச்சு: இருதரப்பு மோதலில் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Tags : Mohali ,Punjab ,
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை