×

புதுவண்ணையில் ரவுடியை கொலை செய்தது ஏன்?: கைதான 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்

தண்டையார்பேட்டை: கத்தியால் எங்களை வெட்ட முயன்றதால் ரவுடியை வெட்டி கொலை செய்தோம் என கைதான 5 பேர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அஜய் (எ) பம்பு அஜய் (21). பிரபல ரவுடி. அடிதடி, வழிப்பறி, திருட்டு, கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தனது பாட்டியை பார்க்க சென்றுள்ளார்.

அங்குள்ள நண்பர்களுடன் நள்ளிரவு மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதால் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தேவையில்லாமல் பேசினால் அனைவரையும் கத்தியால் வெட்டிவிடுவதாக பம்பு அஜய் மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த நண்பர்கள், பம்பு அஜய் வைத்திருந்த கத்தியை பறித்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சிறிது நேரத்தில் துடிதுடித்து பம்பு அஜய் இறந்தார். தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஜய் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரித்தபோது 2 சிறுவன் உள்பட 5 பேர் கும்பல் அஜய்யை அரிவளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அதே பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த விக்கி (எ) சொல்யூஷன் விக்கி (24), ஜீவா (23), அன்பரசு (எ) இன்பா (25) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என்பதும், இதில் சொல்யூஷன் விக்கி மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு போதையில் ஜீவாவை அஜய் வெட்டியுள்ளார். இதனால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:

சுனாமி குடியிருப்பு பகுதியில் மதுஅருந்தி கொண்டிருந்தபோது அஜய் வைத்திருந்த பையை மறைத்து வைத்தோம். அவர் பையை கேட்டு சண்டை போட்டுள்ளார். வலுக்கட்டாயமாக பையை பிடுங்கிய அஜய், அதிலிருந்த கத்தியை எடுத்து எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் சுதாரித்து கொண்ட நாங்கள், கத்தியை பறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினோம். அதன்பிறகுதான் அஜய் இறந்து போனது எங்களுக்கு தெரியும். இவ்வாறு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து 5 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் 3 பேரை புழல் சிறையிலும், சிறுவர்கள் 2 பேரை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர். இந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post புதுவண்ணையில் ரவுடியை கொலை செய்தது ஏன்?: கைதான 5 பேர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Rudy ,New Villa ,Rudi ,Roudi ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அடுத்த ஆதனூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை..!!