காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோயில் முன்பு சன்னதி தெருவில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. பிறந்தநாள் கொண்டாடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த பேக்கரியில் நேற்று கேக் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். வீட்டிற்கு கொண்டு சென்று கேக்கை வெட்டிய போது, கேக் முழுவதும் பூஞ்சை காளான் படர்ந்து, கெட்டுப் போன நிலையில் இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இதுதொடர்பாக உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி, உணவுப்பொருள் துறை அதிகாரி வேல்முருகன் மற்றும் அதிகாரிகள், பேக்கரியில் சோதனை நடத்தினர்.
இதில் கடையில் கெட்டுப்போன நிலையில் இருந்த 600 கிலோ கேக், தின்பண்டங்கள் மற்றும் திரும்ப பயன்படுத்திய 200 கிலோ எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் மாடியில் கேக் தயாரிக்கும் கூடம் முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமாக இருந்தது. ெதாழிலாளிகளுக்கு கையுறைகள் வழங்கவில்லை. இதையடுத்து உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள், பேக்கரியை மூடி சீல் வைத்து, உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
The post பிறந்த நாளுக்கு வாங்கிய கேக்கில் பூஞ்சை காளான்: பேக்கரிக்கு சீல் appeared first on Dinakaran.