×

குடிபோதையில் பாலியல் டார்ச்சர் பள்ளி பருவ காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று எரித்த மனைவி

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அருகே, எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த வழக்கில், அவரது மனைவி மற்றும் அவரது பள்ளிப்பருவ காதலனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில், கடந்த மார்ச் 19ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. உத்தனப்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாஷ் (43) என்பது தெரியவந்தது. இது குறித்து, அவரது மனைவி லட்சுமியிடம் (36) போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், கணவரை அடித்துக் கொன்று, காதலன் சின்னராஜ் (38) உதவியுடன், சானமாவு காட்டிற்கு எடுத்துச் சென்று உடலை தீ வைத்து எரித்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பருவத்து நண்பரான சின்னராஜுடன்(38) எனக்கு தகாத உறவு இருந்தது. இதனால், கணவருடன் என்னால் நெருக்கமாக பழக பிடிக்கவில்லை. ஆனால், எனது கணவர் பிரகாஷ், போதையில் வீட்டுக்கு வந்து, எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த மார்ச் மாதம், அவ்வாறு தொந்தரவு கொடுத்ததால் ஆத்திரமடைந்த நான், அவரை கட்டையால் அடித்தேன். இதில் அவர் உயிரிழந்து விட்டார். பின்னர், காதலன் சின்னராஜூடன் சேர்ந்து கணவர் சடலத்தை வேனில் எடுத்துச் சென்று, சானமாவு காட்டில் தீ வைத்து எரித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து லட்சுமி, அவரது காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்: வேலூர் அடுத்த இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ் (30), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (29). 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சுரேஷ் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். கடந்த 13ம் தேதி சுரேஷ் குடித்துவிட்டு வந்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லதா, இரவு 11 மணியளவில் தூங்கி கொண்டிருந்த கணவர் சுரேஷ் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதில், உடல் முழுவதும் எரிந்த நிலையில் சுரேஷ் அலறி துடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து லதாவை கைது செய்தனர்.

The post குடிபோதையில் பாலியல் டார்ச்சர் பள்ளி பருவ காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று எரித்த மனைவி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Uthanapalli ,
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை