×

சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 10 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 44.37 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) ஆகிய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று (17.05.2023) போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) தொடர்பாக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (17.05.2023) பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 44.37 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (17.05.2023) காலை, புது வண்ணாரப்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அடியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த அறிவரசன், வ/21, த/பெ.ரவி, திருப்புவனம் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் எதிரி அறிவரசன் தனது நண்பருடன் சேர்ந்து ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும், இவர் மீது ஏற்கனவே விருதுநகர் மாவட்ட காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கு உள்ளதும் தெரியவந்தது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள எதிரி அறிவரசனின் நண்பரை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதே போல, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Mount) தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (17.05.2023) அசோக்நகர், 100 அடி சாலை சந்திப்பு அருகே கஞ்சா வைத்திருந்த பிரவாத்குமார் பிஸ்வால், வ/20, த/பெ.பிரகாஷ் பிஸ்வால், ஜெகநாத்பூர், ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Triplecane) தலைமையிலான, காவல் குழுவினர் நேற்று (17.05.2023) பெரியமேடு, மூர்மார்கெட் வளாகத்தில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த கார்த்திக் சந்திரகிரி, வ/32, த/பெ.கூமா கிரி, ஓடிசா மாநிலம், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் எதிரி கார்த்திக் சந்திரகிரி ஓடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதர இடங்களிலும் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

The post சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 10 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai, Chennai ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...