×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை ஜன. 1ம் தேதியில் இருந்து வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1ம் தேதியிலிருந்து வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்குவது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறை.

இந்தச் சூழ்நிலையில், இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும். ஆனால், இந்த 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது, மூன்று மாதம் காலந்தாழ்த்தி அகவிலைப்படி உயர்வை அரசு வழங்கி இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்படும் உயர்வு ஆகும். இதனைக் காலந்தாழ்த்தி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. ஒன்றிய அரசின் அறிவிக்கையை மேற்கோள்காட்டி ஆணை வெளியிடப்பட்டால்தால், ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமையும். இல்லையெனில், மாநில அரசு தனிவழியை பின்பற்றுகிறது என்பதுபோல் ஆகிவிடும். இதுபோன்ற நடவடிக்கையின்மூலம், அகவிலைப்படி உயர்வை தன் விருப்பப்படி அளிக்க அரசு முனைகிறதோ என்ற ஐயமும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர கருணை அல்ல. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், எதிர்வரும் காலங்களில் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முறையே ஒன்றிய அரசு அறிவித்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே நிலவுகிறது.

இதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அறிவித்துள்ள 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அகவிலைப்படி உயர்வு ஆணையில் ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை ஜன. 1ம் தேதியில் இருந்து வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : O.M. ,Pannerselvam ,Chennai ,Bannerselvam ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...