புதுடெல்லி: உயர் வகுப்பினருக்கு கூடுதலாக 10சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி,‘‘நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்தி வாலா ஆகிய மூன்று பேரும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், முன்னாள் தலைமை நீதிபதியான யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரபட் ஆகிய இருவரும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீர்ப்பை அளித்திருந்தனர். இதையடுத்து இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்தியப்பிரதேச காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர், திமுக, மதிமுக உட்பட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்தர் பட், பி.எம்.திரிவேதி மற்றும் ஜே.பி.பரிதிவாலா ஆகிய ஐந்து பேர் கொண்ட அமர்வில் கடந்த வாரம் சேம்பர் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,\\” இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் முன்னதாக பெரும்பான்மையான அதாவது மூன்று நீதிபதிகள் ஒருமித்த உத்தரவு பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவு செல்லும். அதில் எந்த மறுஆய்வும் செய்ய வேண்டியது கிடையாது என தெரிவித்த நீதிபதிகள், சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தொடர்பாக திறந்த கோர்ட்டில் எந்த விசாரணையும் நடைபெறாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
The post உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 % இடஒதுக்கீடு செல்லும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
