×

பூண்டி மாதா பேராலய தேர்பவனி கோலாகலம்: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் உள்ள 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், தமிழ்நாட்டில் வேளாங்கண்ணிக்கு அடுத்தத பிரசித்தி பெற்ற பேராலயமும், ஏசு சுமந்த சிலுவையின் ஒரு சிறு துண்டு இங்கு உள்ளதும் இந்த ஆலயத்தின் சிறப்பு ஆகும். இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டிற்கான விழா கடந்த 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடியேற்றி திருப்பலி நடத்தினார்.

விழாவையொட்டி தினமும் நவநாட்களாக கருதப்பட்டு மரியா அன்னையின் வாழ்க்கை பயண பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தினமும் திருப்பலிக்கு பின், சிறப்பு செபமாலையோடு சிறு தேர்பவனி, நற்கருணை ஆராதனை மற்றும் குணமளிக்கும் நற்செய்தி கூட்டமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (14ம் தேதி) காலை 6 மணிக்கு பூண்டி மாதா ஆலயத்தின் முன்னால் பங்குத்தந்தை லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோரின் நினைவு திருப்பலி நடந்தது. தொடர்ந்து குடந்தை ஆயர் அந்தோணிசாமி மாலை 6 மணியளவில் திருவிழா சிறப்பு திருப்பலி “மரியா-அருளின் ஊற்று” என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு தேர்வு பவனி நடந்தது. மின் விளக்குகளாலும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கபட்ட ஆடம்பர தேர் பவனியை குடந்தை ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து துவக்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் மேற்கொண்டிருந்தனர். தேர் பவனியை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருச்சி, கும்பகோணம், சென்னை என அனைத்து பகுதிகளுக்கும் குடந்தை போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் திருப்பலி, சப்பரம் மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ் உள்பட பலர் செய்திருந்தினர்.

The post பூண்டி மாதா பேராலய தேர்பவனி கோலாகலம்: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thirukkatupalli ,Thirukatupalli ,Thanjai District ,Basilica ,India ,Tamil Nadu ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு