×

கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்: நாளை சிரசு திருவிழா நடக்கிறது

குடியாத்தம், மே 14: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடக்கிறது.தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.இதில் பிரதி வைகாசி மாதம் 1ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதனைக்கான பல்வேறு மாவட்டகள் மற்றும் ஆந்திர, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும், இக்கோயிலில் விற்றிருக்கும் கெங்கையம்மன் மிகவும் பழமையான, சக்திவாய்ந்த அம்மனாக பொதுமக்கள், பக்தர்களிடைய நம்பிக்கை உண்டு.

அத்தகைய சிறப்பு வாய்ந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி கடந்த 11ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கெங்கையம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து உற்சவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக முக்கிய விதிகளில் தேரோட்டம் நடைபெறும்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். வழிநெடுகிலும் உப்பு, மிளகு ஆகியவற்றுடன் நாணயங்கள் தேர் மீது இறைத்து பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இவ்விழாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாளை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற உள்ளது. அதில் அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் தொடர்ந்து நாளை மறுதினம் மஞ்சள் நீராட்டு விழா வரும் 17ம் தேதி பூபல்லக்கு 22ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இத்திருவிழாவுக்கு கடந்த 15 ஆண்டுகளாக வேலூர் மாவட்ட அளவில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்: நாளை சிரசு திருவிழா நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Kengaiyamman ,Sirasu festival ,Gudiatham ,Vellore District Gudiatham ,Kengaiyamman Temple Chariotam ,Tamil ,Kengaiyamman Temple Chariotam: ,
× RELATED வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்...