×

‘இராவண கோட்டம்’படத்தை தடுக்காதீர்கள் தயாரிப்பாளர் வேண்டுகோள்

சென்னை:சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு நடித்த படம் ‘இராவண கோட்டம்’ நேற்று முன்தினம் வெளியானது. விக்ரம் சுகுமாரன் இயக்கி உள்ளார். கேஆர்ஜி குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவிக் கிடக்கும் கருவேலமரக் காடுகளின் பின்னணியில் உருவாகி உள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்தியும், இன்னொரு ஜாதியை தாழ்த்தியும் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் ‘இராவண கோட்டம்’ படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கப்படவில்லை. மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘இராவண கோட்டம்’படத்தை தடுக்காதீர்கள் தயாரிப்பாளர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shantanu Bhagyaraj ,Anandhi ,Prabhu ,Vikram Sukumaran.… ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...