×

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.561.26 கோடியில் முடிவடைந்த 14 திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; ரூ.201 கோடியில் 9 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 561 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவிலான 14 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 201 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கொடுங்கையூரில் 170 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில், நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட தொடர் தொகுதி உலை முறையில் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்; அம்பத்தூர் மண்டலம், வார்டு 89 மற்றும் வார்டு 92ல் முகப்பேர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் புதிய பாதாள சாக்கடை திட்டம் அமைத்திடும் வகையில் 2 கோடியே 62 லட்சம் செலவில் கழிவுநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணி; அம்பத்தூர் மண்டலம், வார்டு 93ல் பாடிக்குப்பம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் உந்துநிலையம் அமைத்தல் மற்றும் கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணி; நெசப்பாக்கத்தில் 74 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில், நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட தொடர் தொகுதி முறை புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்;

சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில், கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர் நகர் கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள்; வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், ரூ.51 கோடியே 98 லட்சம் செலவில், வள்ளியம்மை நகர் மற்றும் என்.டி.பட்டேல் ரோடு ஆகிய பகுதிகளுக்கான கழிவுநீர் குழாய்கள், கழிவுநீர் விசைக்குழாய்கள் மற்றும் கழிவுநீரிறைக்கும் நிலையம் அமைக்கும் திட்டம்; வளசரவாக்கம் மண்டலம், வார்டு 149 ராமகிருஷ்ணா நகர் பகுதியில் 41 கோடியே 97 லட்சம் செலவில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகிக்கும் திட்டம்; வளசரவாக்கம் மண்டலம், போரூர், வார்டு எண்.151 மற்றும் 153க்குட்பட்ட பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 38 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்; வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் தமிழ் நகர் மற்றும் ஆலங்குளம் பகுதிகளுக்கு 32 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்;

ஆலந்தூர் மண்டலம், வார்டு 157ல் மணப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 19 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டம்; ஆலந்தூர் மண்டலம், வார்டு 157ல் மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி பகுதியில் ரூ.22 கோடியே 40 லட்சம் செலவில் விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்; ஆலந்தூர் மண்டலம், வார்டு 158 நந்தம்பாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக 4 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவுநீர் உந்து குழாய் அமைக்கும் பணிகள்; பெருங்குடி மண்டலம், உத்தண்டி பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 24 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டம்; சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் 73 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டம் என மொத்தம் 561 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவிலான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 14 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

ராயபுரம் மண்டலம், தண்டையார்பேட்டை உந்துநிலையம் முதல் தண்டையார்பேட்டை கழிவுநீர் உந்துநிலையம் வரை 22 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 750 மி.மீ. விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள்;
ஆர்.கே. நகர் மண்டலம், தண்டையார்பேட்டை உந்துநிலையம் முதல் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை 84 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 மி.மீ. விட்டம் கொண்ட கழிவுநீர் உந்துகுழாய்கள் அமைக்கும் பணிகள்; அம்பத்தூர் மண்டலம், வார்டு 84, படவட்டம்மன் தொழிற்பேட்டையில் உள்ள விடுபட்ட தெருக்களுக்கு 3 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வார்டு 85, சிவானந்தா நகர் முதல் குளக்கரை கழிவுநீர் உந்துநிலையம் வரை உள்ள விடுபட்ட தெருக்களுக்கு 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வார்டு 85 மற்றும் 86, எம்.கே.பி நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய இடங்களில் விடுபட்ட தெருக்களுக்கு 13 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டங்கள்;

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 133, 134 மற்றும் 135 அசோக் நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் பகுதிகளில் 3 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய்களை விரிவாக்கும் திட்டம்; சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 137, சூளைப்பள்ளம் பகுதிக்கு 6 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்;
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், அடையாறு மண்டலம், வார்டு 168, சிட்கோ நகர் கழிவுநீர் உந்துநிலையம் முதல் பாலாஜி நகர் கழிவுநீர் உந்து நிலையம் வரை 1 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 250 மி.மீ விட்டமுடைய கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் திட்டம்;

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், அடையாறு மண்டலம், வார்டு 168, ஆலந்தூர் ரோடு பகுதிக்கு 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்; சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 200, செம்மஞ்சேரி பகுதிக்கு 50 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம்; சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136, 140, 141 மற்றும் 142 தியாகராய நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதிகளில் 9 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய்களை விரிவாக்கும் திட்டம் என மொத்தம் 201 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 9 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பொன்னையா, ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.561.26 கோடியில் முடிவடைந்த 14 திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; ரூ.201 கோடியில் 9 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Water Supply and Sewerage Board ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Municipal Administration and Water Supply Department ,Secretariat ,Dinakaran ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...