×

கட்டுமானம் முடிந்த பணிகளுக்கு ஒன்றிய அரசு ரூ.1 லட்சம் கோடி பாக்கி: பில்டர்ஸ் அசோசியேஷன் குற்றச்சாட்டு

கோவை: ஒன்றிய அரசு கட்டுமானம் முடிந்த பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை நிலுவையில் வைத்துள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (பிஏஐ) குற்றம்சாட்டியுள்ளது. கோவையில் பிஏஐ சங்கத்தின் தேசிய தலைவர் நரசிம்ம ரெட்டி, மாநில தலைவர் ஐயப்பன், ஒருங்கிணைப்பு தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டல துணைத் தலைவர் ஜான் பால் ஆகியோர் நேற்று கூட்டாக அளித்த பேட்டி: கட்டுமான திட்டங்களுக்கு வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது.

நாடு முழுவதும் மாநில நெடுஞ்சாலைகள், மின்சார திட்டங்கள், தொழிற்சாலை திட்டங்கள் என ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. எனவே, ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்தித்து அனுமதியை பெறும் வகையில் ஒற்றைசாளர முறையை பின்பற்ற வேண்டும். நெடுஞ்சாலைகள், விமான நிலைய விரிவாக்கம், தொழிற்சாலைகள் அமைப்பது என ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்த திட்டங்களுக்கு நிலத்தை எடுப்பதில் ஏற்படும் சிக்கலால் திட்டம் தாமதமாகிறது.

பெரும்பாலான திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தாமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் டெண்டர் விடப்படுகிறது. எனவே, திட்டம் செயல்படுத்துவதற்கு முழுமையாக நிலம் கையகப்படுத்திய பின்பும், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு டெண்டர் விட வேண்டும். கட்டுமான பணிகளுக்கு சிமென்ட், இரும்பு கம்பிகள் மிக முக்கியமானது. இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நியாயமான விலையில் கிடைக்க சிமென்ட், இரும்பு கம்பிகள் விற்பனைக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.தேசிய அளவில் பல்வேறு திட்டப்பணிகள் முடிவுற்ற நிலையிலும் நிதி முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. அதன்படி, ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளில் முடிவுற்ற பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால், ஒப்பந்ததாரர்கள் அடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். கட்டுமானத்துறைக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்க வேண்டும். மின் இணைப்பு நடவடிக்கை, வங்கி கடன்கள் ஆகியவற்றில் தளர்வு ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கட்டுமானம் முடிந்த பணிகளுக்கு ஒன்றிய அரசு ரூ.1 லட்சம் கோடி பாக்கி: பில்டர்ஸ் அசோசியேஷன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Builders association ,Coimbatore ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...