×

பசுமை தமிழகம் திட்டத்தில் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு மரக்கன்று வழங்க திட்டம்: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தகவல்

சென்னை: ஸ்விகி, சோமொட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். தேசிய வனக்கொள்கையின்படி, ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33%, அதாவது தமிழ்நாட்டில் 42,919 சதுர கி.மீ பரப்பளவில் பசுமை போர்வை இருக்க வேண்டும். ஆனால், தற்போது 31,194 சதுர கி.மீ பரப்பளவு மட்டுமே உள்ளது. அதன்படி, இந்த இலக்கை எட்ட மேலும், தமிழகத்திற்கு 13, 500 சதுர கி.மீ பரப்பளவு (மொத்த பரப்பளவில் 9%) பசுமை போர்வையை உருவாக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு கடந்தாண்டு ‘பசுமை தமிழகம் திட்டம்’ தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி உள்நாட்டு வகை மரங்கன்றுகளை நட திட்டமிடப்பட்டது. வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் நர்சரிஸ் உதவியுடன் கடந்தாண்டு மட்டும் 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான இலக்காக 7.50 கோடி மரக்கன்றுகள் நடும் பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு அளித்த சிறப்பு பேட்டி: தமிழ்நாட்டில் முதல்முறையாக 2.80 கோடி மரக்கன்றுகள் மிக பெரியளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. வேளாண், ஊரக வளர்ச்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு நடவு பணிகள் செய்யப்பட்டதால் தான் இவை சாத்தியப்பட்டன. கடந்த வருடம், 350 நர்சரிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை தமிழகம் திட்டத்திற்கு என மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் (கிரீன் கமிட்டி) அமைந்தோம். அதன்படி, இந்த குழுக்கள் மூலமாக புதிய மரக்கன்றுகளை நடுதல் தொடர்பான தகவல்கள் பெறப்படுகின்றன. நடப்பாண்டு 500 நர்சரிகளை உருவாக்கி அதன் மூலம் இலக்கை நோக்கி செல்ல உள்ளோம். முதற்கட்டமாக காடுகளின் உள்ளே மரக்கன்றுகளின் பரப்பை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளைவை 33 சதவீத விழுக்காடாக உயர்த்த பல வழிகளில் திட்டமிடப்பட்டு அதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

மரக்கன்றுகள் வீடுகளுக்கே டெலிவரி: பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட விழாக்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக அளிக்க விரும்புவோர் பசுமை தமிழகம் திட்டத்தின் www.greentnmisson.com இணையதளங்களின் வாயிலாக பெற்றுக்கொள்ளும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை ஆர்டர் செய்யலாம். இதில் 60க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். பசுமை தமிழகம் திட்டத்தின் இணையத்தளம் வாயிலாக ஆர்டர் செய்யப்படும் மரக்கன்று விதைகள் அல்லது மரக்கன்றுகளை ஸ்விகி, சோமொட்டோ மூலமாக பொதுமக்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளுக்கான பணத்தை பொதுமக்கள் போன் பே, கூகுள் பே மற்றும் யு.பி.ஐ போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் செலுத்தி கொள்ளலாம் என்றார்.

The post பசுமை தமிழகம் திட்டத்தில் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு மரக்கன்று வழங்க திட்டம்: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தகவல் appeared first on Dinakaran.

Tags : Green Tamilnadu ,Forest ,Department ,Supriya Sahu ,Chennai ,Forest Department ,Supriya ,Swiggy ,Somoto ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...