×

புதுச்சேரியில் தவறான அறுவை சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு: ஜிப்மர் மருத்துவமனை ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உரிய கவனமின்றி அறுவை சிகிச்சை செய்ததால் இளம் பெண் உயிரிழந்த வழக்கில், பெண்ணின் பெற்றோருக்கு ரூ.22.95 லட்சம் இழப்பீடு வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ ராஜேஸ்வரி (22). தகவல் தொழில் நுட்ப வல்லுநராக பெங்களூருவில் பணியாற்றி வந்த இவர். கடந்த 2015ம் ஆண்டு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கர்ப்பபையில் நீர்க்கட்டி இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என ஆலோசனை வழங்கியுள்ளனர். இதையடுத்து, மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவால் லேப்ராஸ் கோபிக் சிஸ்டெக்டமி என்னும் அறுவை சிகிச்சை கடந்த 28.12.2015-ல் மேற்கொள்ளப்பட்டது. மறுநாளே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அதன் பிறகும் ராஜேஸ்வரிக்கு வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 30.12.2015 மற்றும் 31.12.2015 ஆகிய தேதிகளில் ராஜ ராஜேஸ்வரி மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அறுவை சிகிச்சை காரணமாக ஏற்படும் வலி என்றும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வலி, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி அதிகரித்ததால், 8.1.2016 , 9.1.16 ஆகிய தேதிகளில் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று ராஜேஸ்வரி சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 20.1.2016 அன்று, அறுவை சிகிச்சை காயத்திலிருந்து மலம் வெளியேறுவதை அவர் கவனித்ததால். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு லேபரடோமி அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிய வயிறு திறக்கப்பட்டது. பெருங்குடலின் ஒரு பகுதியில் 1செ.மீ அளவு ஒரு துவாரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மலம் வயிற்றில் கசிந்து செப்டிசீமியா ஏற்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின் ராஜ ராஜேஸ்வரி தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார். ஆனால் அவர் 22.01.16 அன்று உடல் உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். லேப்ராஸ் கோபிக் அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே தங்களின் ஒரே மகளை தாங்கள் இழந்துவிட்டதாக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜ ராஜேஸ்வரியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதை மாநில ஆணையம் விசாரித்து.

இந்த நிலையில், வழக்கில் நீதிபதிகள் பொங்கியப்பன், டாக்டர் எஸ்.சுந்தர வடிவேலு மற்றும் உமா சங்கரி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை அகற்றும் லேப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை உரிய கவனத்துடனும் திறனுடனும் மேற்கொள்ளப்படவில்லை. தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால் நோயாளி இறந்துள்ளார். எனவே அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் மருத்துவமனையும் ராஜ ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு மாநில ஆணையத்தில் புகார் அளித்த நாளான 17.2.17 லிருந்து 9% வட்டியுடன் ரு 22,94,986 இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் தவறான அறுவை சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு: ஜிப்மர் மருத்துவமனை ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,State Consumer Reduction Commission ,Jipmer Hospital ,State Consumer Deferment Commission ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு