×

கும்மிடிப்பூண்டியில் ரூ.1,891 கோடியில் ஏர் கண்டிஷனர்கள் அமைக்கும் தொழிற்சாலை :மிட்சுபிஷி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1,891 கோடி செலவில் ஏர் கண்டிஷனர்கள் அமைக்கும் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1,891 கோடி முதலீட்டில் சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா பெருவாயல் கிராமத்தில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி டெவலப்பர்களின் தொழிற்பேட்டையில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரசர்களை தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது. இந்த புதிய தொழிற்சாலையானது மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரசர்கள் தயாரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலையாகும். இந்த தொழிற்சாலை உள்நாட்டு சந்தையில் அதிகரித்து வரும் ஏர் கண்டிஷனர் தேவையை பூர்த்தி செய்யும் மற்றும் 2025ம் ஆண்டு அக்டோபருக்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா இண்டஸ்ட்ரியல் பார்க் சென்னை லிமிடெட் (எம்ஐபிசிஎல்), மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் மற்றும் ஜப்பானின் சுமிடோமோ கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் ஒப்பந்தம் செய்து, அதன் தொழில் பூங்காவில் இந்த வசதியை அமைக்க நிலம் கொடுத்துள்ளது. எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் உலக அளவில் பெரிய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட மிட்சுபிஷி நிறுவனம், சென்னையின் மஹிந்திராவின் ஆரிஜின்ஸ் என்ற இடத்தில் 52.4 ஏக்கரில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரவர்களை தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது.

சுமார் ரூ.1,891 கோடி முதலீட்டில் இந்த வசதி முழுமையாக 8 ஆண்டுக்குள் அதாவது முழு செயல்பாட்டுக்கு வரும். இந்த நிறுவனம் தமிழகத்திற்கு வருவதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 60 சதவீதம் பேர் பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இது செயல்பாட்டிற்கு வந்ததும், மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட் ரூம் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் 6,50,000 யூனிட் கம்ப்ரசர்களின் உற்பத்தி திறனை அடையும் என்று கூறப்படுகிறது. மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்மிடிப்பூண்டியில் ரூ.1,891 கோடியில் ஏர் கண்டிஷனர்கள் அமைக்கும் தொழிற்சாலை :மிட்சுபிஷி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!! appeared first on Dinakaran.

Tags : Air Conditioners Factory ,Kummidippundi ,Mitsubishi ,Tiruvallur ,Mitsubishi Electric Company ,Thiruvallur District, ,Kummippundi ,Gummidippundi ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டியில் யோகா சாம்பியன் வென்ற பள்ளி மாணவனுக்கு விருது