×

வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரித் திருவிழா; இன்று நள்ளிரவு 12 மணிக்கு புஷ்பரத தேரில் அம்மன் ஏறுதல் நிகழ்ச்சி: அணைக்கட்டு அருகே நாளை நடக்கிறது

அணைக்கட்டு, மே 9: அணைக்கட்டு அருகே வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா நாளை நடக்கிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு புஷ்பரத தேரில் அம்மன் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லாண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் ஊர் கோயிலும் வேலங்காடு கிராமம் சித்தேரியில் பொற்கொடியம்மன் ஏரிகோயிலும் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன் கிழமை அன்று புஷ்பரத ஏரி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனை வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அறநிலையத்துறையினருடன் இணைந்து விழாவை நடத்தி வருகின்றனர்.

அதன்படி வல்லாண்டராமம் கிராமத்தில் உள்ள பொற்கொடியம்மன் புஷ்பரத தேரில் தாய் வீடான வேலங்காடு ஏரிக்கு வரும் வைபவம் புஷ்பரத ஏரி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு திருவிழா நாளை 10ம் தேதி வேலங்காடு ஏரியில் நடக்கிறது. விழாவில் நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டும் இன்றி அணைக்கட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

ஏரித் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஊர் கோயில், ஏரிகோயிலில் உள்ள பொற்கொடியம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்படுகிறது. தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு இன்னிசைக் கச்சேரியும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு வல்லண்டராமம் கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரத தேரில் அம்மன் ஏறுதல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் புஷ்பரத வீதி உலாவும் நடக்கிறது. பின்னர் அன்னாசிபாளையம் கிராமத்தில் புஷ்பரத தேர் வீதி உலா, அதன் பிறகு புஷ்பரத தேர் வேலங்காடு ஏரிக்கு தூக்கிவரப்பட்டு கோயிலில் ஏரி திருவிழாவும் நடக்கிறது. புஷ்பரத ஏரி திருவிழா நடக்க உள்ள வேலங்காடு ஏரியில் திருவிழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும் பணிகள் நேற்று இறுதிக்கட்டத்தில் தீவிரமாக நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக காவல்துறையினரும், பக்தர்கள் வந்து செல்வதற்கு வேண்டிய வசதிகள் செய்வது தொடர்பாக அறநிலையத்துறையினரும் வருவாய் துறையினரும் ஏரியில் நேற்று ஆய்வு செய்தனர்.

The post வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரித் திருவிழா; இன்று நள்ளிரவு 12 மணிக்கு புஷ்பரத தேரில் அம்மன் ஏறுதல் நிகழ்ச்சி: அணைக்கட்டு அருகே நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Velankadu Borkodiyamman Pushpa Ratha Lake Festival ,Goddess ,Pushparatha Chariot ,Damkatu ,Velankadu Porkodiamman Pushparatha lake festival ,Velankadu Porkodiamman Pushpa Ratha Lake Festival ,Ammanna ,Dinakaran ,
× RELATED கரந்தை கருணாசாமி கோயில் வைகாசி பெருவிழா கொடியேற்றம்