×

விவசாயிக்கு சரமாரி வெட்டு

பாப்பிரெட்டிப்பட்டி, மே 6: பொம்மிடி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொடுவாளால் வெட்டிய தம்பி மீது வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அடுத்த வத்தல்மலை ஒன்றியகாடு பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தன்(55). இவரது தம்பி ரங்கன்(50). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப சொத்தில் ரங்கனுக்கு பாகம் பிரித்து கொடுத்தனர். அதனை அவர் விற்பனை செய்துவிட்டார். இதையடுத்து தற்போது அண்ணன் கோவிந்தனிடம் உள்ள நிலத்தில் தனக்கு பங்குவேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை கோவிந்தன், தனது நிலத்தை உழவுப்பணி மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரங்கன், எனக்கு நிலத்தை பிரித்துக்கொடுக்காமல் உழவு செய்யக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

அப்ேபாது அருகில் கிடந்த கொடுவாளால் கோவிந்தனை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது இடதுபக்க தலை மற்றும் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதைப்பார்த்த ரங்கன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். கோவிந்தனை அவரது மகள் மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் பொம்மடி போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரங்கனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விவசாயிக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Pommidi ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...