நெல்லை, மே 6: வணிகர் தினத்தை முன்னிட்டு நெல் லை மாநகரில் 700 கடைகள் அடைக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மே 5ம் தேதி வணிகர் சங்க தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஓரிடத்தில் கூடி மாநாடு நடத்தி தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்துவது வழக்கம். இந்த ஆண்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிக உரிமை முழக்க மாநாடு ஈரோட்டில் நடந்தது. இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று பேசினார்.
வணிகர் தினத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மளிகை, காய்கறி, பழம், பேக்கரி கடை உள்ளிட்ட கடைகள் நேற்று காலையிலிருந்து இரவு வரை மூடப்பட்டிருந்தன. டீ கடைகள் மட்டும் காலையில் அடைக்கப்பட்டு மாலையில் திறக்கப்பட்டன. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் மற்றும் மார்க்கெட் பகுதியில் சுமார் 700 கடைகள் மூடப்பட்டிருந்தன. பாளை தற்காலிக மார்க்கெட்டில் சுமார் 380 கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள வியாபாரிகள் 3 வேன்களில் திரண்டு ஈரோடு மாநாட்டுக்கு சென்றிருந்தனர். டவுன் மற்றும் ரத வீதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
The post வணிகர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகரில் 700 கடைகள் அடைப்பு appeared first on Dinakaran.